கேரளாவில் உள்ள வர்கலா பகுதியில் வசித்து வந்த ஆனி சிவா 18 வயதில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தனது படிப்பையும் நிறுத்திவிட்டு காதல் திருமணம் செய்துகொண்டார். குழந்தை பிறந்த சில மாதங்களில் கணவர் இவரை பிரிந்து சென்றுவிட்டார்.
ஆனி சிவா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றார். பெற்றோர்களும் ஆனி சிவாவையும் ஆறுமாத கைக்குழந்தையையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
ஆனி சிவாவின் பாட்டி மட்டுமே ஆதரவு கரம் நீட்டியுள்ளார். திருமணத்திற்காக நிறுத்திய படிப்பை மீண்டும் தொடர்ந்தார் ஆனிசிவா. படிப்பை தொடர்ந்து கொண்டே தனக்கும் தனது குழந்தைக்கும் ஏற்படும் செலவை சமாளிக்க லெமன் ஜூஸ் விற்பது, ஐஸ்க்ரீம் விற்பது, மசாலா பொருள்கள் விற்பனை, சலவை சோப்பு விற்கும் ஏஜெண்ட் சிறு சிறு பணிகளை செய்தார்.
2016 ஆம் ஆண்டு பட்டபடிப்பை முடித்தவுடன் காவல் துறையில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளார். இதில் தேர்வு பெற்று காவலராக முதல்முதலாக காவல் பணியில் அடியெடுத்தது வைத்தார்.
உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்து 2019 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றிபெற்றார்.
2019ல் உதவி ஆய்வாளர் பதவிக்கான பயிற்சியை தொடங்கிய ஆனி, தற்போது பயிற்சி முடித்தார். ஆனி சிவா எந்த வர்கலா தெருக்களில் ஐஸ்க்ரீம், ஜூஸ் விற்றாரோ அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக தற்போது பதவியேற்றுள்ளார்.
இதை கேள்விப்பட்ட கேரள அரசின் காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனி சிவா குறித்து பதிவிட்டு பாராட்டி உள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தின் சாதனை பெண்மணியாக உருவாகி உள்ளார் ஆனி சிவா.