கோயம்புத்தூர்:-
ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக கழிவறைகளை சுத்தம் செய்யும் மனிதர்.
கோயம்புத்தூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர். லோகநாதன் (53). இவர் கோயம்புத்தூரில் வெல்டிங் தொழில் செய்துவருகிறார். இவரது வேலை முடிந்த பின்னர் தனியார் நிறுவனங்களில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக செலவிடுகிறார்.
அதுமட்டுமல்லாமல் அரசு நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வருடா வருடம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பத்தாயிரம் ரூபாய் அளிக்கிறார் லோகநாதன் மேலும் ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பண உதவிகளும் செய்கிறார்.
இதுகுறித்து கூறிய லோகநாதன்:-
குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. எனது 12 வயதில் முதலில் ஒரு பேப்பர் மில்லில் வேலை செய்தேன். பின்னர் வெல்டிங் ஒர்க் ஷாப்களில் வேலை செய்தேன். அங்கு தான் இந்த வெல்டிங் தொழிலை கற்றுக்கொண்டேன். பின்னர் அதுவே எனக்கு தொழில் ஆகிப்போனது. அந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமான நாட்கள். அப்பொழுது நாம் அனுபவிக்க கூடிய இந்த கஷ்டத்தை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என்று முடிவு செய்தேன்.
அதனால் என்னால் முடிந்த ஏதேனும் உதவிகள் செய்யவேண்டும் என்பதற்காக சில உதவிகளை செய்து வருகிறேன். இதுவரை 1600 ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் ஆரம்ப கல்விக்கு உதவி உள்ளேன்.
எனது வேலை முடிந்த பின்னர் சில தனியார் நிறுவனங்களில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டேன். ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் கிடைத்தது, பின்னர் படிப்படியாக மாதத்திற்கு 2000 ரூபாய் வரை கிடைத்தது. அதை வங்கிகளில் சேமித்து அதன்மூலம் குழந்தைகளின் படிப்பிற்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். இந்த கழிவறை சுத்தம் செய்யும் வேலையை எனது குடும்பத்தினரும் நண்பர்களும் விரும்பவில்லை. பலர் கூறியும் நான் கேட்கவில்லை. இதனால் என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். நான் இதை கௌரவ குறைச்சலாக கருதவில்லை, இதை மக்களுக்கு செய்யும் தொண்டாக தான் நினைக்கிறேன். இதன் மூலம் மக்களுக்கு என்னால் செய்ய முடிந்த ஒரு சுகாதார உதவி.
கடந்த 2002ஆம் ஆண்டு என்னைப்பற்றி நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டது தற்போது பலருக்கும் என்னை தெரிகிறது.
தற்பொழுது சொந்தமாக வெல்டிங் தொழிற்சாலையை தொடங்கியுள்ளேன். ஏனெனில் எந்நேரமும் அந்த வேலை போகலாம் என்று உணர்ந்தேன். அவ்வாறு நிகழ்ந்தால் என்னால் குழந்தைகளுக்கு உதவ முடியாது எனவே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து தொடங்கி விட்டேன் என்று முடித்துக் கொண்டார்.