இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா நோய் தொற்று பரவும் இந்த கடினமான காலகட்டத்தில் குழந்தைகள், குடும்பத்தை மறந்து சேவை செய்யும் செவிலியர்களின் பணி மகத்தானது.
சர்வதேச செவிலியர் தினமான 2020 இன் தீம் “Nursing the World to Health”.
உலக செவிலியர் தின பின்னணி:-
பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (The Lady With The Lamp) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார்.
கிரிமிய போரின் (Crimean War) போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார்.
அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு நிறுவி ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார்.
அவர் பிறந்து 200-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி இந்த ஆண்டு செவிலியர் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு:-
இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் – பிரான்சிஸ் நைட்டிங்கேல். இவர்கள் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பணியாற்றிய போது அவர்களுக்கு 3-வது குழந்தையாக பிளாரன்ஸ் நகரில் நைட்டிங்கேல் 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பிறந்தார்.
நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர்.
ஜெர்மன், பிரஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமை பெற்று இருந்த இவர், ‘அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாகவே இருக்கிறது’ என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார். இதனால் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் படிப்பு படிக்க ஆசைப்பட்டார்.
ஆனால் பெற்றோர்கள், அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். திருமணம் செய்ய மறுத்த, பெற்றோரின் எதிர்ப்பை மீறி 1844-ம் ஆண்டு, நைட்டிங்கேல் ஜெர்மனியின் கைசர்வெர்த்தில் உள்ள பாஸ்டர் பிளைட்னரின் லூத்தரன் மருத்துவமனையில் செவிலியர் மாணவியாக சேர்ந்தார்.
பின்னர் கல்வியை முடித்து கொண்டு 1850-ம் ஆண்டு, லண்டனுக்குத் திரும்பினார், அங்கு அவர் ஒரு மிடில்செக்ஸ் மருத்துவமனையில் நர்சிங் வேலையைப் பெற்றார்.
அங்கு அவரது செயல்திறன் மூலமாக நைட்டிங்கேல் பணியமர்த்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
நைட்டிங்கேல் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனையில் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைந்தது. கடின உழைப்பு அவரது உடல்நிலையை பாதித்தது. அவரது நர்சிங் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்கள் வந்த போதும் அவற்றில் இருந்து எல்லாம் அவர் மீண்டு வந்தார்.
கிரீமிய போர்:-
ஒட்டோமான் பேரரசைக் கட்டுப்படுத்த ரஷ்யா சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷ் பேரரசு 1853-ம் ஆண்டு கிரிமியன் போரில் ஈடுபட்டது.
ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கருங்கடலுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 1854-ம் ஆண்டு இந்த போரில் 18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பெண்கள் செவிலியர்கள் பணி செய்ய எதிர்ப்பு கிளம்பியது.
இதனை எதிர்த்து போராடிய நைட்டிங்கேல், 1854-ம் ஆண்டின் பிற்பகுதியில், போர் செயலாளர் சிட்னி ஹெர்பெர்ட்டின் உத்தரவின்படி 34 செவிலியர்களைக் கொண்ட ஒரு குழுவை கூட்டி, கிரிமியாவிற்கு சென்று படுகாயமடைந்த போர் வீரர்களுக்கு விளக்குகள் ஏந்திச் சென்று சிகிச்சை அளித்தார்.
நாற்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தாதிகளுடன் அவர் தமது பணியைத் தொடங்கினார். நோயாளிகளை நிர்வகிப்பதில் அவர் வகுத்து தந்த திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மிக கடுமையான ஒழுங்குமுறையை அடிப்படையாக கொண்டவை. அதனை பின்பற்ற தயங்கியோரும், செயல்படுத்த தவறியோரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புளோரன்ஸின் அந்த இரும்புகர நடவடிக்கை அபரிமிதமான பலனைத் தந்தது. அவர் வருவதற்கு முன் 42 விழுக்காடாக இருந்த மரண விகிதம் குறைந்து இரண்டு விழுக்காடானாது.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொண்டில் சிறந்து விளங்கியதுடன் ‘கிரிமியா’ போரில் உயிருக்குப் போராடிய பலரின் கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ யாகத் தோன்றினார்.
அங்கீகாரம்:-
இவருடைய சேவையை பாராட்டி 1883-ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கப்பட்டது.
இவருடைய 84-வது வயதில் இவரது அரிய சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி ‘Order of Merit’ என்ற உயரிய பட்டத்தை 1907-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதை பெற்ற முதல் பெண்மனி அவர் என்பது குறிப்பிடதக்கது.
அதற்கு அடுத்த ஆண்டு ‘Freedom of the City of London’ என்ற உயரிய அங்கீகாரத்தையும் பெற்றார்.
இவ்வாறு அவர் வாழ்க்கை முழுவதையும் செவிலியர் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து அரிய பல சேவைகளை செய்து 1910-ம் ஆண்டு 90 வயதில் இயற்கை எய்தினார்.
அவருடைய மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந்தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராக கைமாற்றப்பட்டு மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது.
எனவே அடுத்த முறை நீங்கள் ஒரு செவிலியரை/தாதியரை சந்தித்தால் அவர்களுக்கு கைதட்டவோ அல்லது பூத்தூவவோ தேவையில்லை அவருக்கு நன்றி சொல்லுங்கள் போதும்.