மங்களூரு
கடந்த 1-ந்தேதி உடுப்பி அருகே நடந்த கம்பளா போட்டியில் தக்ஷின கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா மீஜார் அஸ்வத்புராவை சேர்ந்த சீனிவாச கவுடா (29) என்பவர் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் சீனிவாசகவுடா 142.5 மீட்டர் இலக்கை 13.62 விநாடிகளில் மாடுகளை ஓட்டிச் சென்று முதல் பரிசை வென்றார்.
அதாவது ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். அதுபோல் கம்பளா போட்டியில் 142.5 மீட்டர் பந்தய தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து சீனிவாச கவுடா சாதனை படைத்துள்ளார்.
அதாவது, சீனிவாச கவுடா பந்தய தூரத்தை கடக்க சென்ற வேகத்தின் அடிப்படையில் 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்திருப்பதாகவும், அவர் உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் கம்பளா போட்டியின் நடுவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கவுடா சாதனை முறியடிப்பு
இந்நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூரு வேனூர் பகுதியில் கம்பளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பஜகோலி ஜோகிபெட்டு பகுதியை சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது, சீனிவாச கவுடா 142.5 மீட்டர் தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்தார். ஆனால் நிஷாந்த் ஷெட்டி 143 மீட்டர் தூரத்தை 13.61 வினாடிகளில் கடந்துள்ளார். அதாவது, நிஷாந்த் ஷெட்டி பந்தய தூரத்தை கடக்க சென்ற வேகத்தின் அடிப்படையில் 100 மீட்டர் தூரத்தை 9.52 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் சீனிவாச கவுடாவின் சாதனையை 2 வாரங்களுக்குள் நிஷாந்த் ஷெட்டி முறியடித்துள்ளார். நிஷாந்த் ஷெட்டி ஓட்டிச் சென்ற எருதுகள் ஒசபெட் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
100 மீட்டர் தூரத்தை 9.52 விநாடிகளில் கடந்த சீனிவாசகவுடா, ஜமைக்காவின் உசேன் போல்டின் சாதனையை முறியடித்த நிஷாந்த் ஷெட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.
இந்த சாதனை குறித்து நிஷாந்த் ஷெட்டி கூறுகையில்:-
கம்பளா போட்டியில் புதிய சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் உசேன் போல்ட்டுடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல. ஏனெனில் கம்பளா களத்துக்கும், ஓட்டப்பந்தய களத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது என்றார்.