ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரது பதக்கம், தங்கப் பதக்கமாக மாறுமா என்பது தற்போது தங்கம் வென்றுள்ள சீன வீரங்கனை Hou Zhihuiக்கு எடுக்கப்படும் ஊக்கமருந்து பரிசோதனையின் முடிவில் தான் தெரியவரும்.
இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் லோவ்லினா பார்கோயின்.
மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் 69 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. அதில், சீன-தைபே வீராங்கனை நின் சின் சென் என்பவரை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து மகளிர் குத்துச்சண்டையில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, குறைந்தபட்சம் வெண்கலம், மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஏகோபித்த எண்ணமாக உள்ளது.
சரி, லோவ்லினா பார்கோயினின் பின்னணி குறித்து காணலாம்,
தற்போது ஒலிம்பிக் விளையாட்டை கூர்ந்து கவனித்து வரும் ஒவ்வொரு இந்தியரும் கூறி வருவது, 23 வயதான குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் பெயரைதான்.
கடந்த 1997-இல் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோமுகியா கிராமத்தில் பிறந்தார் லவ்லினா.
அவரது தந்தை திக்கேன் சிறிய அளவில் தொழில் செய்து வருகிறார். அவரது அம்மா மமோனி போர்கோஹைன் இல்ல நிர்வாகி. இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
தனது உறவுக்கார பெண் ஒருவரின் மூலமாக முவாய் தய் (Muay Thai) எனும் தற்காப்பு கலையினை கற்றுக்கொண்டார்.
தந்து 13 வயதில் ஒரு நாள் லவ்லினாவின் தந்தை இனிப்பு பலகாரத்தை நியூஸ் பேப்பர் ஒன்றில் சுற்றிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த நியூஸ் பேப்பர் தான் லவ்லினாவின் பாதையை மாற்றியது.
அந்த பேப்பரில் முகமது அலி குறித்த செய்தி இருந்தது. அதை படித்ததும் தானும் முகமது அலி போல ஆக வேண்டுமென கடுமையாக உழைத்தாள் லவ்லினா.
லவ்லினா 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு தனது திறனை நிரூபித்து காட்டினார். அதன் மூலம் முறையான பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார்.
பின்னர் 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் புகழ் பெற்றார் லவ்லினா. தொடர்ந்து 2018-19ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்று அசத்தினார் லவ்லினா.
இதேபோல், கடந்த மே மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றுள்ளார்.
பின்னர் வால்டர் வெயிட் (Welterweight) என்றழைக்கப்படும் 69 கிலோ எடைப்பிரிவில் ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை 3 – 2 என்ற கணக்கில் அவர் வென்று காலிறுதிக்கு முன்னேறி, காலிறுதியில் சீன-தைபே வீராங்கனையான சென் நீன் சின்னை வீழ்த்திய டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதிசெய்துள்ளார் லவ்லினா.
ஒலிம்பிக்ஸ் சென்ற அசாமின் முதல் பெண் குத்துச்சண்டை வீரர் என்பதோடு மேரி கோம் மற்றும் விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லப்போகும் மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லோவ்லினா என்பது குறிப்பிடத்தக்கது.