தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நன்கு படிக்கும், ஆனால் உயர்கல்வி கற்பதற்கான சூழல் இல்லாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் என்ன படிக்க விரும்பினாலும் அதற்கான தெளிவை உதவியை வழங்கி வருபவர் அழகை ராஜம் ராமநாதன் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராமநாதன்.
இந்திய அரசு நடத்தும் இந்திய குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று IFS துறையைத் தேர்ந்தெடுத்து பல்வேறு நாடுகளில் இந்திய அரசின் தூதராக சிறப்பாக பணியாற்றி, தற்போது மதுரையில் தன்னுடைய ஓய்வு காலத்தை குழந்தைகளோடு குழந்தையாக இருந்து அவர்களுக்கான கல்வி உதவியை வழங்கி வருபவர்தான் ராமநாதன்.
இந்திய நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றபோது நம் நாட்டின் இந்திய தூதராக ராமநாதன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி கற்பதற்கான சூழல் இல்லாத மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் நேர்காணலுக்கு அழைக்கிறார்.
இந்த நேர்காணல் 3 முறை நடக்கும். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தான் விரும்பும் உயர்கல்வியை கற்பதற்கான சூழலை ஏற்படுத்தி, உயர்கல்வியை முடிக்கும்வரை அவர்களுக்கான பண உதவியை நேரடியாக அவர்கள் படிக்கும் பள்ளியிலோ, கல்லூரியிலோ செலுத்தி வருவது இவரது பணி.இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியாக அவரது இல்லம் வந்து தங்களது பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காகவே பல்வேறு கல்வியாளர்களை சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அழைத்து வந்து விடுவார்.
இவர்களுக்கு மொழி அறிவு மற்றும் பொதுஅறிவு வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியும் நடைபெறும். மேலும், போட்டித் தேர்வுகளில் பங்கு எடுப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவார்.ஏறக்குறைய 3000 மாணவர்கள் பல்வேறு உயர் கல்வியைப் பெற்று பல்வேறு பதவிகளில் இன்று பணியில் உள்ளார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்றும் அவருடைய தொடர்பில் உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ராமநாதன் நினைவு அறக்கட்டளையின் சார்பாக மாணவர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டி அறிவுரைகளை வழங்குவார்கள். இந்த ஒன்று கூடுகையில் பிற்பகலில் அவர்களின் மூலம் பயின்று வரும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நடனம், நாடகம், பாட்டு, ஆட்டம் என அத்தனையும் உண்டு. அப்படி ஒரு உற்சாகமான நாளாக அனைவருக்கும் அமையும்.
அறக்கட்டளையின் சார்பில் பயின்று உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் வந்து அந்த ஒன்று கூடுகையில் கலந்து கொள்வார்கள்.10 ஆண்டுகளுக்கு முன்பாக அழகை ராஜம் ராமநாதன் நிறைவு அறக்கட்டளையின் சார்பாக முதியோர் இல்லம் தொடங்கப்பட்டு, அதற்கான முழு நிதியையும் ராமநாதன் வழங்கி தொடர்ந்து நடத்தி வருவது பெருமையான ஒன்று.
தொடரட்டும் இவரது தொண்டு. இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை இவர் மூலம் பெறட்டும்.
-தொடரும்