தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.
தீக்கதிர் நாளிதழில் ஆசிரியர் கே முத்தையாவிற்கு அடுத்த நிலையிலிருந்து முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தியவர் வி பரமேஸ்வரன்.திருச்சி மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக முழு நேர பணியாளராக இருந்து கட்சிப் பணி ஆற்றிக் கொண்டிருந்தார்.அப்போது மிசா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலம் அதையும் மீறி கட்சிப் பணிகள் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இதன் காரணமாக இவரது பெயருக்கு முன்பு அடைமொழி “மிசா” ஆனது.பரமேஸ்வரன் மிசா பரமேஸ்வரன் ஆனார்.தொடர்ந்து தீக்கதிர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.மிகச் சிறந்த பேச்சாளர் நகைச்சுவையோடு, ஆவேசம் நிறைந்த அவரின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் தனது பணியை மேற்கொண்டார். தீக்கதிர் மாலை பத்திரிக்கையாக இருந்தபோதும் சரி காலை பத்திரிக்கையாக ஆன பின்னரும் இவரது பங்களிப்பு பிரமாண்டமானதாக இருந்தது.பணியாற்றிய தோழர்களோடு இவரது அணுகுமுறை ஆச்சரியத்தக்க வகையில் இருக்கும்.
புன்முறுவலோடு எப்போதும் இருப்பார் .இளைய தோழர்களை வளர்த்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு இருப்பார்.என் போன்றவர்கள் எழுத்துப் பணிக்கு அச்சாரமாக இருந்தவர் தோழர் வி பரமேஸ்வரன்.ஆங்கிலத்திலும் மலையாள மொழியிலும் நன்கு மொழியாக்கம் செய்ய கூடியவர்.வெளிமாநிலத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் மொழிபெயர்ப்பு பணியினை லாவகமாக கையாண்டு மிகச் சிறப்பாக பங்கேற்பாளர்களை கட்டிப்போடும் ஆற்றல் இவருக்கு உண்டு.மே தினம் நவம்பர் புரட்சி தினம் மற்றும் முக்கியமான அரசியல் விளக்க பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தோழர்களை வசியம் செய்வது இவரது கலைகளில் ஒன்று.இவரது எழுத்து நடையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும்.தீக்கதிர் நாளிதழில் வெளிவரும் பெரும்பாலான தலையங்கம் கட்டுரைகள் இவருடையதாக அமையும். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அந்த அளவிற்கு ஜனரஞ்சக தோடு இவரது பேச்சுக்கள் இருக்கும்.
நிர்வாகப் பணிக்கு வந்த என்னை எழுத்துப் பணியில் ஈடுபட வைத்த பெருமை இவரையே சாரும்.மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டாள்புரம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை வழியாக ஏழு கிலோமீட்டர் தூரம் கொண்ட தீக்கதிர் அலுவலத்திற்கு சைக்கிளில் அன்றாடம் வந்து செல்வேன்.தீக்கதிர் அலுவலகம் நுழைந்தவுடன் சிறிது நேரம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு முக்கியமான நாவல்களை வாசித்துக் கொண்டிருப்பேன்.
அப்போது என்னை அழைத்து ஏன் நீங்கள் ஆசிரியர் குழுக்கு வந்துஉதவக்கூடாது என்று கேட்டார்.மறுப்பு ஏதும் கூறாமல் உடனடியாக சென்றேன். அப்போது தீக்கதிர் நாளிதழுக்கு செய்திகள் வருவது பெரும்பாலும் ஏ என் ஐ நிறுவனமும் பி. டி. ஐ. நிறுவனங்கள் மூலம் அரசு சார்ந்துள்ள செய்திகள் டெலி பிரிண்டர் மூலம் அல்லது நேரடியாக கொண்டுவந்து அலுவலகத்தில் சேர்ப்பார்கள்.அதைத்தொடர்ந்து பி. ஐ. பீ. நிறுவனமும் நேரடியாக செய்திகளை தீக்கதிர் அலுவலகத்தில் கொண்டுவந்து வழங்குவார்கள்.மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை செய்திகளாக பெரும்பாலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் செய்திகளை தபால் மூலம் தீக்கதிர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.மாவட்டங்களிலிருந்து வந்த செய்தியை சுருக்கி அச்சுக்கு அனுப்பவேண்டும். மாவட்டங்களிலிருந்து வரும் செய்தியை எழுதித் தருவதற்கு தனியாக ஒரு தோழர் இருந்தார் ஆனாலும் என்னை இப்பணியில் ஈடுபடுத்துவதற்கு நீங்களும் சில செய்திகளை சுருக்கி எழுதி தாருங்கள் என்று எனக்கு அனுமதி வழங்கினார்.
அதை எழுதிக் கொடுத்த போது எப்படியெல்லாம் எடிட் செய்வது சுருக்கி எழுதுவது என்ற கலையை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் தோழர் வி பரமேஸ்வரன். மாவட்டங்களிலிருந்து பத்து பக்கத்திற்கு குறையாமல் செய்தி எழுதி அனுப்பி இருப்பார்கள் அதை ஒரு பக்கமாக மாற்றி எழுதி செய்தி ஆக்கிவிடுவார்.இதுபோன்ற திறமையை வளர்த்துக்கொள்ள எனக்கு வழிகாட்டியவர் தோழர் பரமேஸ்வரன்.மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த பொதுக்கூட்டங்களுக்கு சென்று செய்தி சேகரித்து வா என்றும் என்னை பணி பார்.எனக்கு அப்போது இருந்த மிகப்பெரிய வாய்ப்பு சைக்கிள்.எங்கு சென்றாலும் பேருந்து எதிர்பார்க்காமல் சைக்கிளிலேயே பொதுக் கூட்டங்களுக்கு சென்று செய்தி சேகரித்து மறுநாள் காலையில் திரும்ப எழுதி அவரிடம் சேர்ப்பேன்.
நான் எழுதிக் கொடுத்த செய்தியை மாற்றி இப்படித்தான் எழுத வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார். குறிப்பாக ஒவ்வொருவருடைய பெயருக்கு முன்பு திரு அல்லது திருமதி அதுபோன்று பெயருக்கு பின்பு அவர்கள் என்று எழுதுவது கூடாது. நீங்கள் எழுதிக் கொடுத்தாலும் அது பத்திரிகையில் வராது இதுதான் நடைமுறை என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன். நடைமுறையில் அவர்கள் இவர்கள் என்று எழுதலாம்.பத்திரிக்கை நொடியில் இதுபோன்று பயன்படுத்தக் கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.தினத்தந்தி அதிபர் ஆதித்தனார் எழுதிய பத்திரிகையாளர் கையேடு எனும் நூலினை எனக்கு வழங்கியதோடு இதைப் படித்து நடைமுறைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கினார்.
இந்த நூல் எனது எழுத்துப் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தது.தோழர் பரமேஸ்வரன் மிகச் சிறந்த சமையல் கலைஞரும். வித்தியாசமான உணவு செய்வதில் ஆர்வம் கொண்டவர். மிக சுவையாக பிரியாணி செய்வதில் இவருக்கு நிகர் இவரே.முக்கியமான நாட்களில் தோழர்கள் அனைவரையும் அழைத்து விருந்திட்டு உபசரிப்பார்.நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கு பத்திரிகை துறையையும் எழுத்து உலகத்தையும் காட்டியவர் ஆசிரியர் பரமேஸ்வரன்.
தொடரும்..