பெங்களுர்:
‘மரங்களின் தாய்’ என அழைக்கப்படும் கர்நாடகாவை சேர்ந்த ‘திம்மக்காவுக்கு’ கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த “மரங்களின்தாய்” என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சாலுமாரதா திம்மக்காவுக்கு கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 108 வயதான அவருக்கு பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று, நேற்று பல்கலைக்கழக அதிகாரிகள் முனைவர் பட்டம் வழங்கினார்கள்.
கன்னடத்தில் “மரங்களின் வரிசைகள்” என்று பொருள்படும் ‘சாலுமாரதா’ என பிரபலமாக அழைக்கப்படும் இவர், தனது கணவரின் சொந்த ஊரான துமகுரு மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஹுலிகலுக்கும் குடூருக்கும் இடையில் 4 கி.மீ தூரத்துக்கு 400 ஆலமரங்களை வரிசையாக வளர்த்துள்ளார், இதனால் அவர் “மரங்களின் தாய்” என்றும் அழைக்கப்படுகிறார்.திம்மக்காவிற்கும் அவரது கணவருக்கும் குழந்தைகள் இல்லை, இதனால் தினமும் மாலை நேரங்களில் கணவனும் மனைவியும் இணைந்து மரங்களை தங்கள் குழந்தைகள் போலவே பார்த்து, பார்த்து வளர்க்க தொடங்கினார்கள்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திம்மக்காவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியபோது, அவர் ஆசீர்வாதத்தின் சைகையாக ஜனாதிபதியின் நெற்றியில் தனது உள்ளங்கையை வைத்தார், இது பார்வையாளர்களிடம் மிகப்பெரிய கைதட்டலைத் பெற்றது. பின்னர் அவர் 2019 ல் ராஷ்டிரபதி பவனில் ஒரு மரக்கன்றையும் நட்டார். திம்மக்காவுக்கு கர்நாடக ராஜ்யோத்சவ விருது, ஹம்பி பல்கலைக்கழகத்தின் நாடோஜா விருது மற்றும் இந்திய அரசின் தேசிய குடிமகன் விருது மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.