தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை ,அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.
நான்.. எம்.ஜெ. பிரபாகர்.. இன்று 60 ஆம் வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ஆம்.. இன்று எனது பிறந்தநாள்.பொதுவாழ்வில் 40 ஆண்டுகள், ஊடகத்துறையில் 35 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். தீக்கதிர் பத்திரிக்கையின் நிர்வாக மேலாளராக 10 ஆண்டுகள்,மக்கள் கண்காணிப்பகம் மனித உரிமைப் பணியில் 10 ஆண்டுகள் ,மதுரை காரல் மார்க்ஸ் நூலகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவன்,தற்போது சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைமை நிலைய மேலாளராக என பணியின் மீது கொண்ட காதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது
எத்தனை களங்கள்.. எத்தனை மனிதர்கள்.. அனுபவ அறிவுரைகள்.. அறிவார்ந்த தோழர்கள்.. அரவைணைக்கும் குடும்ப உறவுகள்.. நான் கடந்து வந்த இந்த பாதையில் நான் பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்கள் சிலரை இந்த தொடரின் மூலம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
என் தந்தை கி. முத்துசாமி. தாயார் மு. லட்சுமி. எனது சொந்த ஊர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எப்போதும் சாரலை தந்து குளிர்விக்கும்
இன்றைக்கு உள்ள தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகிலுள்ள லட்சுமி நாயக்கன்பட்டி.
இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாதன் சுவாமி நினைவு உயர்நிலைப்பள்ளியில் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தேன்.
இந்த பள்ளியில் சுமார் 5 ஆண்டுகாலம் பள்ளி மாணவர் சங்க தலைவராக இருந்தேன். 1973 முதல் 1977 வரை இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது தினசரி காலையில் நடக்கும் பிரேயர் ஒழுங்குபடுத்தி நடத்தி தருவதோடு பள்ளியில் நடக்கும் முக்கியமான விழாக்களில் எனது பங்களிப்பு இருக்கும் .இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வாரமும் நீதிபோதனை வகுப்பு இருக்கும். 40 நிமிடங்கள் இந்த வகுப்பின் காலமாகும். அனைத்தையும் எளிதில் வாசிக்க கற்றுக்கொண்ட எனக்கு இந்த வகுப்பு பொருத்தமாக அமைந்தது .இந்த நீதிபோதனை வகுப்பில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பணி என் வகுப்பு தோழர்களை சத்திய சோதனை (மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு) நூலினை படித்தது தான்.
15 வயது இருக்கும்போது தான் இந்த நூலினை படிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டியது .எனது வகுப்பாசிரியர் ஒவ்வொரு வாரமும் இந்த நூலினை வாசிக்க பணித்து விட்டு சென்று விடுவார். 40 நிமிட நேரமும் நான் சத்திய சோதனை நூலினை மாணவர்களிடையே வாசிப்பேன் .இத நூலினை அந்த காலத்தில் குறைந்தது ஐந்து முறையாவது வாசித்திருப்பேன் .அதனால்தான் என்னுள் மகாத்மா காந்தி உள்ளே புகுந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த போராட்டங்கள் இந்திய மக்களை ஒன்றுபடுத்தி விடுதலை பெற்றுத்தந்த அந்த மகத்தான பணி என்னுள் வேராக இறங்கியது.
அவர் சந்தித்த போராட்டங்கள் ஆகட்டும், கடந்துவந்த அனுபவங்கள் ஆகட்டும் எல்லாமே என்னை புரட்டிப்போட்டது .அவர் போன்று வாழ வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. அவர் போல கதர் ஆடை உடுத்துவது, அவர் எடுத்துக்கொண்ட உணவுகளை குறிப்பாக வேகவைத்த காய்கறிகள், சமைக்காத தேங்காய், பொரிகடலை, கடலைப்பருப்பு ,அச்சுவெல்லம் இதையெல்லாம் சாப்பிட பழகிக்கொண்டேன்.
மகாத்மா காந்தி வாழ்ந்தது போல் நேர்மையாகவும் அமைதியாகவும் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஆழமாக பதிந்து விட்டது. இதற்கு ஏற்றார் போல் என்னுடைய உறவினர் தேவதாஸ் காந்தி மதுரை காந்தி மியூசியத்தில் பொறுப்பாளராக இருந்து வருகிறார். எனது பள்ளி நாட்களில் அவரை நன்கு அறிவேன். எங்கள் கிராமத்திற்கு அவர் எப்போதெல்லாம் வருகிறாரோ அப்போதெல்லாம் அவரோடு என் நாட்களை கடந்து இருக்கிறேன் .
மகாத்மா காந்தி பற்றிய பல்வேறு தகவல்களை என்னுள் அவர் விதைத்து வந்தார். அவர் விதைத்த விதை, நான் அமைதியாகவும் நேர்மையாகவும் வாழ கற்றுக்கொண்டேன். பள்ளிப் படிப்பு முடித்த பின்பு கல்லூரிக்கு சென்றபோது உலகமே மாறி போனது .நான் வாழவேண்டும் என்று நினைத்த வாழ்க்கை திசை மாறியது .எங்கள் குடும்பம் இடதுசாரி சிந்தனை உள்ள குடும்பம். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு அங்கமாக உள்ள பாரம்பரிய குடும்பம். கல்லூரியில் படிக்கும்போது எனது உடை மாறியது. மகாத்மா காந்தி போன்று கதர் ஆடை அணிய வேண்டும் என்ற சூழல் மாறிப்போனது.
அதற்கு காரணம் எனது குடும்ப சூழல். 1977 எனது தாயார் மரணம் என்னுள் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த ஆண்டுதான் எனக்கு பொதுத்தேர்வு நடந்தது. அதைத்தொடர்ந்து கல்லூரி பயணம் மேற்கொண்டேன் ஆனால் என்னுள் எப்போதுமே மகாத்மா காந்தி பயணமாகி கொண்டே இருப்பார். ஒரு நூலினை படிக்கும்போதே இவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படுகிறது என்றால் மகாத்மா காந்தியோடு வாழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய தாக்கத்தை நாம் பெற்றிருக்க முடியும் என்று என் மனதில் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும்.
ஆம். எனக்கு விபரம் தெரிந்த நாட்கள் முதல் என்னை மிகவும் கட்டிப்போட்டவர் மகாத்மா காந்தி அவரது நேர்மையும் அமைதி வழிப் போராட்டம் இன்றும் என்னுள் நடந்து கொண்டே இருக்கிறது என்னை அமைதி வழியில் நடத்திக் கொண்டிருப்பது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு தான்.