விஜயவாடா:-
ஆந்திரவில் அரசுப் பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தொலைதூர விரைவுப் பேருந்துகள் முதல், நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகள் வரை இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு பக்கம் 3 வரிசை, மற்றொரு பக்கம் 2 வரிசை என இருக்கைகள் இருந்தன.
இந்நிலையில் தற்பொழுது ஒரு வரிசையில் மூன்று இருக்கைகள் என்றபடி தற்பொழுது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவில் 36 இருக்கைகள் கொண்ட பேருந்து 26 இருக்கைகள் கொண்ட பேருந்தாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவற்றை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு முகத்திற்கு கவசம் அணிதல், கையில் கையுறை அணிதல், போர்வைகள், குடிநீர் உள்ளிட்டவற்றை தாங்களே கொண்டு வருதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.