சென்னை:-
விசாரணை கைதிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்காமல், தடுப்பு மையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், போலீசாருக்கு தமிழக டிஜிபி J.K.திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில்:-
விசாரணை கைதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீசார் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா கண்டறியப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விசாரணை கைதிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய கூடாது. தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்றே விசாரணை நடத்த வேண்டும்.
ஜாமினில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடியாக போலீஸ் ஜாமின் தர வேண்டும். ஜாமினில் வர முடியாத விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனிக்கட்டடம் ஏற்படுத்த வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.