அமராவதிநகர்:-
முதல் முறையாக வெளிநாட்டிற்கு சிறப்பு பார்சல் ரயில் அனுப்பியதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலம்-லிருந்து (Reddipalem) காய்ந்த மிளகாயை பங்களாதேஷின் பெனபோலுக்கு (Benapole) சிறப்பு பார்சல் ரயில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
முன்னதாக அந்த மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களும் காய்ந்த மிளகாயை பங்களாதேஷுக்கு சாலை மார்க்கமாக அனுப்பி வந்தனர். இதில் குறைந்த அளவிலான மிளகாய்களையே அனுப்ப முடிந்தது. சராசரியாக ஒரு டன் மிளகாய் அனுப்புவதற்கு 7000 ரூபாய் வரை செலவானது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய பொதுப் போக்குவரத்தான பயணிகள் ரயில்கள் இயங்கவில்லை. அதனால் ரயில்வே ஆனது மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர சரக்குகளை பார்சல் ரயில்கள் மூலம் விரைவாக இயக்கி வருகிறது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் 4,304 பார்சல் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது.
அந்த வகையில் குண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளும் வணிகர்களும் பங்களாதேஷுக்கு சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டிய காய்ந்த மிளாகையை, தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway) ஆனது சிறப்பு பார்சல் ரயில் மூலம் முதல் முறையாக எல்லை தாண்டி கொண்டு சேர்த்துள்ளது. இதன் மூலமாக ஒரு முறைக்கு 500 டன்கள் வரை அனுப்ப முடியும். தற்பொழுது 16 பார்சல் வேன்களில் 384 டன் உலர்ந்த மிளகாயை அனுப்பியுள்ளனர். சிறப்பு ரயிலில் செல்வதற்கு ஒரு டன்னுக்கு ரூ.4,608 செலவானது.