விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் கொலைகாரன். இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனையடுத்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். வித்தியாசமான அரசியல் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ‘கோடியில் ஒருவன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனிதான் கவனிக்கிறார். முதல் பாதியை பார்த்துவிட்டேன். இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. நடிகர், இசையமைப்பாளர் என்று தன்னுடைய திறமைகளை நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் எடிட்டிங் திறமையையும் நிரூபிக்க இருக்கிறார். இதற்காக நாங்கள் சம்பளம் கூட தரவில்லை’ என்றார்.