பொதுவாக வாசற்படியில் உட்காரக் கூடாது, தலை வாசலில் தலை வைத்து படுக்கக் கூடாது, படியில் அமர்ந்து சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் நிறைய சொல்வார்கள். ஏன் தலை வாசலில், படியில் அமர்ந்து எதையும் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள், காரணத்தைப் பற்றி பார்ப்போம்.
முற்காலத்தில் தலை வாசல், நாம் குனிந்து செல்வது போல் அமைத்து இருப்பார்கள். காரணம், தலை வாசலில் அஷ்ட லக்ஷ்மிகளும், இருபுறமும் தேவதைகளும் குடி இருப்பதாக ஐதீகம். அவர்களை வணங்கும் விதமாக நாம் தலைக் குனிந்து செல்லும்படி தலை வாசலை வைத்திருந்தார்கள். அதேபோல தலைவாசல் கதவில் குல தெய்வம் குடி இருப்பதாக சொல்கிறார்கள்.
நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவதற்காக குல தெய்வம் காத்திருக்குமாம்.ஆகையால் தலை வாசலை சத்தமிட்டு சாத்தக் கூடாது. காலால் உதைப்பது, காலால் திறப்பது கூடாது என்கிறார்கள். வீட்டின் வாசலுக்கும், தலை வாசலுக்கும் நடுவே ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, புதிய மலர்களைக் கொண்டு அலங்கரித்து வைத்தால், அது நல்ல விதமான நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டுவருமாம்.
பிளாஸ்டிக் மலர் இல்லாமல் , உண்மையான பூக்களை, அன்றைக்கு பூத்த பூக்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். வெளியில் சென்று விட்டு, வீட்டிற்குள் நுழையும்போது, கால்களை சுத்தமாக கழுவி விட்டு வருவதால், சேறு, கிருமிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படும்.
தலைவாசலில் தலை வைத்துப் படுப்பது, வாசற்படியில் அமர்ந்து கதை பேசுவது, சாப்பிடுவது, தலை வாசலில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பேன் பார்ப்பது, போன்ற செயல்களை செய்யக் கூடாது. அப்படி செய்தால் வீட்டினுள் எதிர்மறை சக்தி குடி கொண்டுவிடும்.