“ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்.”
எல்லா நட்சத்திரங்களும் விசேஷமானவை தான் ஆனால் குறிப்பிட்ட சில தமிழ் மாதங்களில் வரும் பிற நட்சத்திரங்கள் கூடுதல் விசேஷமானவை. அதன்படி வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது.
அப்படி இந்த பங்குனி உத்திர நாளுக்கு என்ன சிறப்பு..??
பவுர்ணமி நாளில் கூட சற்று கலக்கத்துடன் தான் ஒளி தருவான் சந்திரன். ஆனால் பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று முழு கலையையும் ஒளியை வழங்குவான். இந்த ஒளி மனித மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்.
தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். கடைசி மாதமாக பங்குனி வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர்.
முருகனுக்கு உரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு, ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாக அமைந்துள்ளது. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மனம் செய்து கொண்டார். இந்த விழா முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரமோற்சவமாக கொண்டாடப்படுகிறது.
சுருக்கமாக கூறினால் இந்த நாளில்தான்
முருகன்- தெய்வானையை மணந்தார்
ஸ்ரீராமர்- சீதாதேவியை மணந்தார்
சுந்தரேஸ்வரர்- மீனாட்சியை மணந்தார்
ரதி தேவிக்காக மன்மதனை சிவபெருமான் மீண்டும் எழுப்பித் தந்த நாள்
அர்ஜுனனின் அவதார நாள்
சபரிமலை சாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் பிறந்த தினம்
ஆண்டாள்- ரங்கமன்னார் திருமணம்
இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஏற்பட்டது ஆகியவை இந்த நாளின் விசேஷம்.
மேலும் இந்த நாளில் தான் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலனை தன் காலால் உதைத்தார்.
தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்நாளில் மனிதர்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டால், மணமாலை சூடுகிற வாய்ப்பு கைகூடி வரும்.
சரி, பங்குனி உத்திர நாளன்று என்ன செய்ய வேண்டும்.???
உத்திரத்தன்று காலையில் நீராடியதும் விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒரு வேளை மட்டுமே உன்ன வேண்டும். இயலாதவர்கள் பால், பழம், சாப்பிடலாம்.
இன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வந்தால் நஞ்சென வந்த துன்பங்கள் பஞ்சாக பறந்துபோகும்.
கல்யாண விரதம் எனும் விரதத்தை இந்த பங்குனி உத்திர நாளில் இருக்கலாம்.
இந்த விரதத்தை சிவபெருமானை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து வழிபடவேண்டும் அவ்வாறு வழிபட்டு தான் தேவர்களின் தலைவனான இந்திரன் இந்திராணியை மணந்தான், மகாவிஷ்ணு மகாலட்சுமி மணந்தார்.
பிரம்மா தன் நாவில் என்னாளும் சரஸ்வதி தேவி இருக்கும் வாய்ப்பை பெற்றார்.
மேலும் சந்திரன் இந்த விரதத்தை கடைபிடித்து தான் 27 கன்னிகளை மனம்தான். எனவே இந்த நாளில் இந்த விரதத்தை கடைபிடித்தால் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.
நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் சிவபெருமான் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருக்க வேண்டும் ஓம் நம சிவாய நம ஓம் பராசக்தி நம என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.
இந்த விரதத்தை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலையில் முருகன்,அல்லது சிவன், கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமண யோகமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
பங்குனி உத்திர விரத பூஜையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து அருகில் பஞ்சமுக குத்துவிளக்கேற்றி ஐந்து வகை எண்ணெய், ஐந்து வகை புஷ்பம், ஐந்து வகை நைவேத்தியம் செய்து கந்தன் கவச பாராயணங்களை படிப்பது நல்லது.
பொதுவாக பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவது நல்லது அதோடு இல்லாதோர் இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது மேலும் நன்மை பயக்கும்.
தோஷங்கள் நீங்கி திருமண தடை அகல…
ஜாதகத்தில் ஏற்பட்ட பல்வேறு தோஷங்களால் திருமண தடை பட்டவர்கள் குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் அனைத்து தடைகளும் தடங்கல்களும் அகலும் சுபயோக சுக வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!