மும்பை:-
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அபுதாபியை சேர்ந்த நிறுவனமான முபாடலா (Mubadala) ரூ.9,093.6 கோடியை ஜியோவில் முதலீடு செய்கிறது.
ஏற்கனவே, ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்த பேஸ்புக் நிறுவனம், இதன் மூலம் 9.99% பங்குகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதே போல் அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனமும் ஜியோவின் 1.5% பங்குகளை ரூ. 5,655 கோடிக்கு வாங்கியது. அமெரிக்காவை சேர்ந்த விஸ்டா நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்து, இதன் மூலம் 2.32% பங்குகளை வாங்கியது. இதேபோல் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஜியோவில் ரூ.6,598.38 கோடி முதலீடு செய்ததன் மூலம் 1.34% பங்குகளை வாங்கியது. கே.கே.ஆர் நிறுவனம் ரூ. 11,367 கோடி முதலீடு செய்து 2.32% பங்குகளை வாங்கியது.
இந்நிலையில் அபுதாபியை சேர்ந்த நிறுவனமான முபாடலா (Mubadala) ரூ.9,093.6 கோடியை ஜியோவில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 1.85% பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் பங்கு மதிப்பு சுமார் ரூ. 4.91 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும் இருக்கிறது.
இத்துடன் சேர்த்து ஜியோ நிறுவனம் கடந்த 6 வாரங்களில் 6 நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 87,655 கோடி ரூபாயை முதலீடாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முபாடலா எலக்ட்ரானிக் சிப் உற்பத்தி நிறுவனமான குளோபல் பவுண்டரிஸை வைத்துள்ளது. ஏஎம்டி போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதுடன், பெட்ரோலியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, விவசாயம், சுகாதாரம், உலோகம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்து வருகிறது.
இதேபோல, அமேசான் நிறுவனத்திடம் முதலீட்டைப் பெற ஏர்டெல் நிறுவனமும் கூகுளிடம் முதலீட்டைப் பெற வோடபோன் நிறுவனமும் பேச்சு நடத்தி வருகின்றன.