கொரோனாவால் நமது நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைக் கண்டிருக்கிறது.
நாட்டின் எல்லாத் துறைகளும் முடங்கியுள்ளதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், வருவாய் குறைந்து நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது.
இதனால், இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டவர்கள், இந்த வருடத்தில் மட்டும் 5.04 பில்லியன் மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்றுள்ளனர். இதனால் இந்திய அளவில் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அச்சத்தை நீக்கி, இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரித்து பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது.
பங்குச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது. எனவே அதில் நிலவும் சரிவைச் சரிசெய்து, பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வாங்கி, தன்வசம் வைத்துகொள்ள முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-
நாட்டின் நிதி நிலைமையை உற்று நோக்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். சந்தையில் மக்களுக்கு இருக்கும் எங்கள் மீதான நம்பிக்கையை இந்தத் தருணத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். வரும் வெள்ளிக்கிழமை (இன்று), இந்தப் பத்திரங்களை வாங்க உள்ளோம். இதன்மூலம், எல்லா சந்தைப் பிரிவுகளிலும் நிலைத்தன்மையை மேம்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்மூலம் முதலீட்டாளர்களின் அச்ச உணர்வை RBI நீக்கியுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.