ஆகஸ்ட் 20ம் தேதி முதல் சிறு, குறு நிறுவனங்களுக்கு தொழில்கடன்கள் கொடுக்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு துறைகளும் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் பலத்த அடிவாங்கியுள்ளன.
இதனால் முதலீட்டை போட்டு மீண்டும் தொழிலை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை சீர்செய்ய மத்திய அரசு உத்தரவாதத்துடன் கடன் வழங்க வழிவகை செய்துள்ளது. தற்போது தனியார் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன், இந்த கடன் திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
சிறு, குறு வணிக நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் பயனர்களின் தகுதிக்கேற்ப வழங்கப்படவிருக்கிறது. ஆண்டுக்கு 17 முதல் 20 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
மகளிர் என்றால் 0.2% என்ற அளவில் வட்டி குறைக்கப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 200 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ஃபேஸ்புக் 100 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கி, இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. Indifi நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பேஸ்புக், கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பதை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
டெல்லி, குர்கான், மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்களில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது.
இதன் மூலம் சரிந்துள்ள பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பும் என்று பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.