புதுடெல்லி:
தாமதமாக செலுத்தப்படும் GST-ககு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வட்டி வசூலிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) முடிவு செய்துள்ளது.
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி GST அமலுக்கு வந்த பிறகு, பலர் GST-யை தாமதமாக செலுத்தியுள்ளனர். இவ்வாறு தாமதமாக செலுத்தப்பட்ட GST-க்கு வர வேண்டிய வட்டி நிலுவை மொத்தம் ரூ.46,000 கோடியை வசூலிக்க உள்ளதாக மத்திய அரசு இந்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்திருந்தது.
மொத்த வரி நிலுவைக்கும் இந்த வட்டி வசூலிப்பதாக மத்திய அரசு முடிவு செய்ததால் தொழில்துறையினர் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்த சூழ்நிலையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(சிபிஐசி) நிகர வரி நிலுவைக்கு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் வட்டி வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதுதொடர்பாக இந்த வாரியம் நேற்று வெளியிட்ட விளக்கத்தில், GST தாமத கட்டணத்துக்கு வட்டி வசூல் நடைமுறை வரும் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து துவங்கும். இதற்கு முன்பு உள்ள நிலுவைகள் வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும்,கடந்த மார்ச் மாதம் நடந்த GST கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இது செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வரி செலுத்துவோருக்கு, முந்தைய தாமதத்துக்கு வட்டி செலுத்துவதில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.