மும்பை:-
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
YES வங்கியை நிர்வகிக்க SBI வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமித்து RBI உத்தரவிட்டுள்ளது
வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு 1,500 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்தது. இதனால், யெஸ் வங்கியை, RBI தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக RBI வெளியிட்ட அறிக்கையில்:-
YES வங்கியின் மூலதனத்தை அதிகரிக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுக்கவும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI-ன் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள RBI, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, அவர்களின் பணத்திற்கும், வட்டிக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.
மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியோடு 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக, ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டியதால், சர்வர் முடங்கியது.
யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.