கடந்த 2018 ஆம் ஆண்டு பரசுராம் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கீதா கோவிந்தம். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான காதல் கதை என்றாலும் படத்தில் வித்தியாசத்தையும் எதார்தத்தையும் அப்படியே காட்சிப்படுத்தியதால் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
“கீதா கோவிந்தம்” திரைப்படம் தெலுங்கு மொழியை கடந்து பிற மொழி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனையடுத்து இந்த ஜோடிகள் மீண்டும் “டியர் காம்ரேட்” படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இவர்கள் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடிகள் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து “புஷ்பா” படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் விஜய் தேவரகொண்டா படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.