பிரபல நடிகையான திரிஷா அரசியலில் விரைவில் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை திரிஷா கிருஷ்ணன் தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக அரசியல் திரில்லர் படமான பரமபதம் விளையாடு படத்தில் நடித்த திரிஷா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய திரைப்படங்கள் முறையே செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மலையாள படமான ராம் பார்ட் ஒன் மற்றும் தமிழ் படமான தி ரோடு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை திரிஷா தனது 39வது வயதில் அரசியலில் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.