கொரோனா வைரஸ் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்:-
கொரோனா வைரஸ் தொடர்பாக இப்போது உலகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியஸானதா என்றால் கண்டிப்பாக ஆம். இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக அளவில் பொருளாதாரம் அடிவாங்கியுள்ளது. ஆனாலும், 15 நாட்கள் அனைத்தையும் மூடி விடுங்கள் என்று அரசாங்கம் சொல்கிற அளவுக்கு இதில் என்ன பிரச்சினை? பிரச்சினை என்றால், இந்த கொரோனா வைரஸுக்கு இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அப்படியென்றால் நிலவேம்பு ப்ரோ என்று கேட்பீர்கள். நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து குடித்தீர்கள் என்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய தடுப்பு மருந்து பட்டியலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துமே வைரஸ் தாக்குதலைத் தடுப்பது மட்டுமே இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்காகப் பயப்பட வேண்டுமா என்றால் இல்லை. ஆனால், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
15 நாட்கள் லீவு ஜாலியாக வெளியே போகலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வெளியே போகக் கூடாது என்றுதான் 15 நாட்கள் விடுமுறை விட்டிருக்கிறார்கள். உங்கள் உடல்நிலை நல்லபடியாக இருந்தாலும் வெளியே செல்லும்போது இந்த வைரஸ் உங்களுக்குப் பரவும். அதனைத் தொடர்ந்து நீங்கள் வீட்டுக்கு வந்தவுடன் உங்களுடைய பெற்றோர், குழந்தைகளுக்கும் பரவிவிடும். இந்த வைரஸ் தொற்றுக்கு நீங்களே ஒரு காரணமாக அமையலாம். உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் நேரிடலாம்.
கொரோனா வைரஸ் தொடர்பாக நிறைய வீடியோக்கள் யூ டியூப் சேனலில் காண முடிகிறது. முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்கள் WHO இணையத்தில் இருக்கும். அதிலிருந்து பாருங்கள். இரவு – பகல் பாராமல் கரோனா தொற்றைத் தடுக்க உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு சல்யூட் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.