சென்னை,
கொரோனா நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் 4 தென்னிந்திய மாநிலங்களுக்கு சேர்த்து 1.30 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார். தமிழகம் முழுக்க விஜய்யின் உத்தரவின் பேரில் மக்கள் மன்றத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் வாடும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ருபாய் அனுப்பி வைத்துள்ளார். இந்த தொகை Vijay charitable trust மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பணம் கிடைத்த பல ரசிகர்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டரை லட்சம் ரசிகர்களுக்கு விஜய் பணம் அனுப்பியுள்ளார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:-
விஜய் எப்போதுமே தான் அளிக்கும் உதவிகள் நேரடியாக மக்களை சென்று சேர வேண்டும் என்று எண்ணுவது வழக்கம். கஜா புயலின் போது மாவட்டங்களில் இருக்கும் தனது மன்ற தலைவர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பி உதவி செய்ய வைத்தார்.
தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்ட செயலாளர்கள், மற்றும் கேரள, ஆந்திர, கர்நாடக, தெலுங்கானா நிர்வாகிகளுக்கும் தகவல்கள் பறந்தன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு சானிடைசர்கள், மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனே மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இரவு பகல் பாராமல் சேவையாற்றும் காவல்துறை, மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு டீ, சாப்பாடு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து பணமாலையுடன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கோவையில் இரவுநேரங்களில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் திட்டக்குடி பகுதிகளில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் போட்டி போட்டு உதவிகள் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிறந்தநாள் அன்று தொடக்கப்பட்ட விலையில்லா விருந்தகம் மூலம் இலவச உணவு வழங்கப்படுகிறது.
விஜய் தனது கையில் இருந்து அளிக்கும் இந்த தொகை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் பயனடைய இருக்கிறார்கள். மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் அடிக்கடி பேசும் விஜய் தமிழக மக்களின் நிலையை கவனத்தில் எடுத்து விசாரித்து வருகிறார். அதே நேரத்தில் நிர்வாகிகள் யாரும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்பதையும் அறிவுறுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.