கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருந்த படம் ‘த்ரிஷ்யம்’. பின்னர் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. அதனையடுத்து இந்த படத்தை சினமா ரசிகர்களும் விமர்சகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப்படம் முதல் பாகத்தை விட கூடுதல் சிறப்பாக உள்ளது என விமர்சகர்கள் கூறிவரும் நிலையில் நடிகர் மோகன் லால் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு புத்தகம் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அமிதாப் பச்சன், “மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால். எனக்கு மிகுந்த அபிமானம் உள்ள ஒரு நபர். அவர் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பியுள்ளார். அவரது மகள் விஸ்மயா எழுதி, வரைந்த ‘க்ரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகம். கவிதைகள் மற்றும் ஓவியங்களின் மிகவும் ஆக்கபூர்வமான உணர்திறன் கொண்ட, பயணம் நிறைந்த புத்தகம். திறமை என்பது ரத்தத்தில் கலந்துள்ளது! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மோகன் லால்,” காலை வணக்கம் சார். நீங்கள் பகிர்ந்த ட்வீட்டுக்கு மிகவும் நன்றி. உங்களிடமிருந்து வந்திருப்பது உயர்ந்த இடத்தில் இருந்து வந்த பாராட்டு. எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.