ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பூ மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அண்ணாத்த திரைப்படத்த்தின் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டன, இந்த நிலையில்தான் கொரோனா காரணமாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.
இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு முன் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதற்கு முன்பாக தனக்கு சில கடமைகள் இருப்பதாகவும், பின்னர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென்றும் ரசிகர்களிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றது. அதனையடுத்து வழக்கம்போல் படப்பிடிப்பில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் 8 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அண்ணாத்த படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அதன்னை தொடர்ந்து ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறது அண்ணாத்தை படக்குழு. இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில் இச்சம்பவம் ரஜினி ரசிகர்களிடையே வருத்தமடைய செய்துள்ளது