நடிகர் வேணு அரவிந்த் நலமுடன் இருக்கிறார், கோமா நிலையில் இருப்பதாக வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று சக நடிகர் அருண் ராஜன் என்பவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். கே.பாலசந்தர் இயக்கிய ‘காதல் பகடை’, ‘காசளவு நேசம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் வேணு அரவிந்த்.
இவருக்கு சமீபத்தில் கொரோனா மாற்றும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, பிறகு குணமாகி வீடு திரும்பினார். அதை தொடர்ந்து உடல்நலன் பாதிக்கப்பட்டதாகவும் பரிசோதித்து பார்க்கும் போது மூளையில் கட்டி இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக நடிகர் சங்கமும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் வேணு அரவிந்துடன் பல்வேறு தொடர்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் அருண் ராஜன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வேணு அரவிந்த் நலமுடன் உள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமா நிலையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகை ராதிகாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை, விரைவில் அவர் ஆரோக்கியமாக மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்போம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.