சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகா இணைந்துள்ளார்.1999-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜோதிகா சில வருடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வர ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 7 வருடங்கள் இந்நிலையில் தொடர்ந்த அவர் 2007-ம் ஆண்டு நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.பின்னர் 2015-ம் ஆண்டு ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். தொடர்ந்து ’நாச்சியார்’, ’செக்கச் சிவந்த வானம்’, ’ராட்சசி’, ’காற்றின் மொழி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜோதிகா தற்போது ’உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இதுவரை இணையாத ஜோதிகா செவ்வாய்க்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இணைந்தார்.
இன்ஸ்டாவில் முதல் பதிவாக சுதந்திர தினத்தின்போது ஹிமாலய மலைகளுக்குத் தான் பயணம் செய்த பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அதில் “அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக சமூக ஊடகத்தில். எனது லாக்டவுன் நாட்களிலிருந்து பகிர நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன.சுதந்திர தினத்தன்று ஹிமாலய மலைகளில், அழகான காஷ்மீரின் கிரேட் லேக்ஸ், 70 km மலையேற்றம். பிகாட் அட்வென்ச்சர்ஸைச் சேர்ந்த ராகுல், சச்சின், ரவுல் மற்றும் அஷ்வின் மேலும் காஷ்மீரைச் சேர்ந்த முஷ்டாக், ரியாஸ் பாய் என அற்புதமான அணியுடன் சென்றேன். நன்றி. நாம் வாழ ஆரம்பிக்கும் வரை வாழ்க்கை என்பது வெறும் உயிரோடு இருத்தல்தான். இந்தியா அபார அழகு கொண்டது. ஜெய்ஹிந்த்” என்று தனது முதல் பதிவைப் பகிர்ந்துள்ளார் ஜோதிகா.
மேலும், தான் மலையேற்றம் செய்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 14 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இந்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.