இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படப்பிடிப்பு, டப்பிங் போன்ற பணிகளுக்காக வெளியே செல்லும் நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாயகன் கமல் ஹாசன், வைகைப் புயல் வடிவேலு, இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன், சுராஜ், நடிகைகள் த்ரிஷா மீனா, நடிகர்கள் சத்யராஜ், மகேஷ்பாபு, இசையமைப்பாளர் தமன் என கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
நேற்று நடிகை குஷ்பு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். இருப்பினும், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலின் வேகம் நம்மை அச்சுறுத்துகிறது. தயவு செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கொரோனாவுக்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும்” என பதிவிட்டுள்ளார்.