சென்னை:-
மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த வாரம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த்துக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் யாஷிகாவுக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த ஐந்து நாட்களான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.