இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படப்பிடிப்பு, டப்பிங் போன்ற பணிகளுக்காக வெளியே செல்லும் நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை சோபானாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, பிரபல மலையாள நடிகரும், ராஜ்யசபா எம்பி.,யுமான சுரேஷ் கோபி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கேரள திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துல்கர் சல்மான், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறிகள் மட்டும் உள்ளன, மற்றபடி நான் நலமாக இருக்கிறேன். வீட்டில் என்னை தனிமைப்படுதிக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்; அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை செய்யுங்கள்.
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தயவுசெய்து முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.