இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
அதனையடுத்து கொரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்துப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிப்ரவரி இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளாராம்.
அதற்கான பணிகளும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து முன்னரே அறிவித்தது போல அண்ணாத்த படத்தினை நவம்பர் 4 தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.