சென்னை:
விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தனிப்பட்ட ஒருவரை விமர்சிக்க அவர்களின் குடும்பங்களை இழுத்து மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலிக்கணக்குகளை தொடங்கி தனக்கு பிடிக்காதவர்களின் கருத்க்களுக்கு எதிர்க்கருத்து கூறுவதாக நினைத்து ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கூட தோனி IPL போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.மகள் ஜிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாலியல் ரீதியான மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது மனைவி சாக்ஷியின் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் மிரட்டல்கள் தொடர்ந்தன. இதையடுத்து மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு சிறுவனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.
இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “மனிதர்களா இவர்கள்? இந்த நபரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்து வேறுபாட்டை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு சப்போர்ட்டா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை யாரும் மாற்றப்போவதில்லை. ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வது பற்றி பொதுவில் சொல்லக்கூடிய இந்த நபர் ஒரு குற்றவாளி.
இவ்வாறு பேசக்கூடிய ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள். எப்படி ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக ஆண்களால் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைப்பார்த்து மவுனமாக இருப்பது வெட்கக்கேடான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.