தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஏன் இந்திய சினிமா ரசிகர்கள் கூட இதுவரை பார்த்திராத கதைக்களமாகவும், கதையாகவும் உருவாகி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு’. இந்த படத்தினை பார்த்திபன் இயக்கியும் நடித்தும் இருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. ‘ஒத்த செருப்பு’ படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து இருந்தார் பார்த்திபன். இவரது இந்த புதுவிதமான முயற்சிக்கு அணைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தனர். இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது. மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
இப்படத்தை தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். ‘இரவின் நிழல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்படவுள்ளது. உலக அளவில் பலரும் முயற்சி செய்த இந்தப் பாணியை, முதன்முதலாக ஆசியாவில் நடிகர் பார்த்திபன் முன்னெடுக்கிறார். இந்நிலையில், ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக பார்த்திபன் சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.