தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக சாமி 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் “அருவா” என்ற படத்தினை இயக்க ஒப்பந்தமானார், ஆனால் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருப்பதால், இந்தப்படம் தள்ளிபோடப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் ஹரி நடிகர் அருண்விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் அருண் விஜக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ‘மாஃபியா’ படத்தில் இணைத்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, யோகி பாபு, ஜெயபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்கும் இப்படத்திற்குஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘அருண் விஜய் 33’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கான சண்டைப்பயிற்சியாளர், படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், படத்தொகுப்பாளராக ஆண்டனியும், ஒளிப்பதிவாளராக கே.ஏ.சக்திவேலும், கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜும், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.