நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது மக்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அங்கு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது என செய்திகள் வெளியான நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்த யோகி ஆதித்யநாத் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.
யோகி ஆதித்யநாத்தின் அந்த கருத்தை கண்டித்து சித்தார்த் கூறிய எதிர்க்கருத்து தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மேலும் பாஜக தலைவர்கள் பலர் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் கடந்த 24 மணி நேரத்தில் 500 கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக பாஜக உறுப்பினர்களாலும் அவர்களது ஐ.டி விங்கை சேர்ந்தவர்களாலும் என்னுடைய அலைபேசி எண் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வசை, பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் என 500 அழைப்புகள் வந்துள்ளன. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படும். நான் பேசுவதை நிறுத்தமாட்டேன். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.