மும்பை:-
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி: அன் டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் கவனம் பெற்றார். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்:-
1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார் சுஷாந்த். பிறகு, பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்த இவர், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்கினார்.
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார். பின்னர் அவருக்கு ‘கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‘பவித்ர ரிஷ்தா’ என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு:-
தொலைக்காட்சியிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட் நடிகர்களில் டி.வியில் இருந்து பெரிய திரையில் சாதித்த மிகச்சிலரில் சுஷாந்தும் ஒருவர்.
சில வருடங்களிலேயே பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2013ல் வெளியான ‘காய் போ சே’ (Kai Po Che) படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார்.
ஆமிர் கான் நடித்த ‘பிகே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கரியரில் பீகே மற்றும் கேதார்நாத் ஆகியவை மிக முக்கிய படங்களாகும்.
முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள ‘Dil Bechara’படம் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இப்படம் ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். கொரோனா பரவல் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடுமையான மன அழுத்த்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள சுஷாந்த்தின் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரை போலீஸார் சடலமாக மீட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ரிஷி கபூர் மற்றும் இர்பான்கான் என இரு பெரிய நட்சத்திரங்களை இழந்த பாலிவுட், 34 வயதே ஆன இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை முடிவால் கலங்கியிருக்கிறது.
தற்கொலை தீர்வல்ல என்று சொன்ன Chhichhore:-
கடந்த 2019ல் ஷ்ரத்தா கபூரூடன் இணைந்து சுஷாந்த் நடித்திருந்த ‘Chhichhore’படம் வணிகரீதியில் மட்டுமல்லாது விமர்சனரீதியிலும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
Chhichhore படத்தில் தற்கொலை முடிவல்ல, வாழ்வில் பிரச்சினைகளிலிருந்து நாம் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் அடைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.