நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர். இவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
நடிகர் விவேக் கடைசியாக லெஜெண்ட் சரவணா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதுலா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விவேக் ஊர்வசி ரவ்துலாவுக்கு தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பத்மஸ்ரீ விவேக் சார், நீங்கள் இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னுடைய முதல் தமிழ் படத்தில் உங்களைப் போன்ற சாதனையாளருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. உங்கள் இழப்பு எனக்கு அதிர்ச்சியளித்தது. விவேக் சாரின் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நினைவுகள் உங்களுடன். நன்றி சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.