நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி அவரது தோழி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் கார் ஓட்டும்போது மதுபோதையில் இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்குக் யாஷிகா மிக வேகமாக காரை ஓட்டி வந்ததே காரணம் என்றும், கார் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் திரும்பினால் சாலை தடுப்பில் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் யாஷிகாவின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விபத்தில் யாஷிகாவின் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு அடைந்ததாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.