இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சின்ன தம்பி’. படிக்காத ஏழ்மையான குடும்பத்து ஆணுக்கும் படித்த பணக்காரப் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், வெளியான போது வசூலை வாரிக் குவித்தது. சில திரையரங்குகளில் தொடர்ந்து ஒரு வருட காலம் வரை திரையிடப்பட்டு புதிய சாதனையையும் படைத்தது. சின்ன தம்பி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவு கூரும் விதமாக நடிகை குஷ்பு, மகிழ்ச்சியான ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சின்ன தம்பி திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது. இயக்குநர் பி. வாசு சார், இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் கே.பாலு, பிரபு சார் மற்றும் ரசிகர்கள் காட்டிய அன்பிற்கு என்றும் கடன்பட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.