இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது.
அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இறந்து வருகின்றனர். அந்த வகையில் பாடகர் கோமகன் தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலில் “மனிதா உன் மனதை கீறி” என்ற வரிகளில் உணர்ச்சி பொங்க பாடியிருப்பார். அதனையடுத்து இந்த பாடலின் மூலம் மிகவும் பிரபலமான இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாடகர் கோமகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், பாடகர் கோமகன் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வார்த்தைகள் இல்லை… மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கும் கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.