தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் கே.வி.ஆனந்த மாரடைப்பால் காலமானார். 54 வயதாகும் இவருக்கு அண்மையில் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1994ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். இதனையடுத்து தமிழில் காதல் தேசம், முதல்வன். பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதனையடுத்து கடந்த 2005ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த அயன்,கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி சினிமா துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.