தமிழ் சினிமா இயக்குநர் எம். தியாகராஜன் இன்று காலை வடபழனியில் உள்ள எவிஎம் ஸ்டூடியோ எதிரே உள்ள தெருவோரமாக பரிதாபமான முறையில் இறந்து கிடந்தார்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம். தியாகராஜன், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டி.எஃப்.டி படித்து சினிமா இயக்குனரானார். வெற்றி மேல் வெற்றி, மாநகரக் காவல் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கினார்.
அவருக்கு அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்திற்கு சினிமாவை நோக்கி வந்தார். வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்தித்தாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், இயகுனர் எம். தியாகராஜன் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று (டிசம்பர் 8) அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார். யாரோ இறந்து கிடக்கிறார் என்ற தகவல் அறிந்து வந்த போலீசார் வந்து ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அவரது உடலை எடுத்துச் சென்றனர். பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.