நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்த இரண்டு பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோதமான கோலிவுட் முதல் பாலிவுட் வரை போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்படுவதும், பின் விடுதலையாவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டது.
ஆனால் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை இவ்விவகாரத்தைப் பூதாகரமாக்கியது. இந்நிலையில், கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ராகினி, சஞ்சனா கல்ராணி இவர்களின் நண்பர்கள் உள்பட 14 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். 10 மாதங்கள் கழித்து தற்போது அந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டார்களா என்பதை ஆய்வுசெய்வதற்காக அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை ஹைதராபாத்திலுள்ள ஆய்வகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். ஆனால் சிறுநீரில் தண்ணீரைக் கலந்து கோல்மால் செய்தனர் இரு நடிகைகளும்.
அதற்குப் பின்னர் அவர்களின் தலைமுடி மாதிரிகளை எடுத்து ஆய்வுக்குட்படுத்தினர். தடவியல் நிபுணர்கள் ஆய்வுசெய்ததில் இருவரும் போதைப்பொருட்கள் உட்கொண்டது உறுதியாகியுள்ளது. வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்திருப்பதால் இருவரும் சிறை செல்ல வாய்ப்பிருக்கிறது.
போதைப் பொருள் வழக்கு விசாரணையில் முதல் முறையாக தலைமுடியை பரிசோதனை செய்திருக்கிறார்கள். போதைப் பொருள் உட்கொண்டால் சுமார் ஓராண்டு காலம் வரை அது முடியில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.