நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இவரது நடிப்பில் பொங்கல் அன்று சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய ஈஸ்வரன் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தையும், இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் “பத்து தல” படத்தையும் நடித்து வருகிறார்.
இதனையடுத்து நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது .
இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இந்த மூவரின் வெற்றி கூட்டணி 3 வது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.