உலகம் முழுவதும் உள்ள திரைத்துறையினர் அனைவராலும் மிகவும் கவுரமானதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாப் 15 படங்களுக்கான பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
92 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இடம் பெற்றுள்ள இந்த போட்டியில், இந்தியாவின் ஆவணப்படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது.
தலித் பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் ஒரே செய்தித்தாளான ‘கபர் லஹரியா’ குறித்து இத்திரைப்படம் விளக்குகிறது. இந்த ஆவணப்படத்தை ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இயக்கியுள்ளனர்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. டைகர் விருது உட்பட பல சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரத்தை வாங்கிக்குவித்த இந்த திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறியது தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறுதிப் பட்டியலில் தங்கள் படம் இடம்பெற்றிருந்தால் மகிழ்ச்சியளித்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூழாங்கல் திரைப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கும் வினோத்ராஜ், ஆஸ்கருக்கு பரிந்துரைத்த இந்திய நடுவர் குழு ஆகியோருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.