புகழ் பெற்ற கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ் மரணத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாத.. என்ற பாடலுக்கு நடனம் வடிவமைத்தவர் பிர்ஜு மகாராஜ். அவரிடம் கற்ற கதக் நடனத்தின் மூலமாக தான் கமல் ஹாசன் அந்த பாடலில் அசத்தியிருப்பார்.
தலைசிறந்த கதக் கலைஞரான இந்தியாவிலேயே உயரிய இரண்டாவது பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். 83 வயதான பிர்ஜு மகாராஜ் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு உணவுக்கு பிறகு பேர்த்தியுடன் விளையாடிக்கொண்டிருந்த பிர்ஜு மகாராஜ், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தனக்கு கதக் நடனம் கற்றுக்கொடுத்த குருவின் மறைவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என பதிவிட்டுள்ளார்.