கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பினார்.
இதன்பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டதோடு, மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
கலைஞானி கமல்ஹாசனைத் தொலைபேசியில் அழைத்து நலம் கேட்டேன். நடந்தவை – நடப்பவை சொன்னார். குணம்பெற வாழ்த்தினேன். கட்டுறுதி மிக்க உடல்; கல்லுறுதி மிக்க மனம்; மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார் என்று குறிப்பிட்டுள்ளார்.