கேரளா :
அனில் நெடுமங்காடு, மலையாள சினிமாவில் முன்னணி குணசித்திர நடிகர் ஆவார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார். அதில் கிடைத்த வரவேற்பையடுத்து, சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் இவ்வருட தொடக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதில் அவர் ஏற்று நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் ‘பீஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இப்படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனில் நெடுமங்காடு, படப்பிடிப்பு முடிந்ததும் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதியில் சிக்கியவர் நீரில் தத்தளித்துள்ளார். கடும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்ட அவரது நண்பர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அனில் நெடுமங்காடுவின் இந்தத் திடீர் மரணம் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.