மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கர்ணன் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “‘கர்ணன்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியையடுத்து, மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்ப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மாரி செல்வராஜ் இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில், த்ருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தினை முடித்து விட்டு தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.